சந்திராயன்-3 வெற்றி பெற வேண்டி திருவையாறு அருகே சந்திரன் கோயிலில் சிறப்பு வழிபாடு

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள சந்திரன் கோயிலில், சந்திராயன்-3 திட்டம் வெற்றி பெற வேண்டி இன்று (ஜூலை 14) சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

திருவையாறு அருகே திங்களூரில் கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நவரக்கிர பரிகாரத் தலமான சந்திரன் தனி சன்னதியில் மேற்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார். தோஷ நிவர்த்திக்காக இங்குள்ள சந்திரனை கைலாசநாதர் வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் ‘சந்திராயன்-3’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்தத் திட்டம் வெற்றி பெற வேண்டி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில், திங்களூரி்ல் உள்ள சந்திரனுக்கு சந்திர பிரதி என்ற சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சந்திரனுக்கு விபூதி, திரவியம் பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, இந்தத் திட்டம் வெற்றியடைய வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE