திமுக ஊழல் பட்டியலின் 2ஆவது பாகம் தயாராக உள்ளது: பாஜக தலைவர் அண்ணாமலை

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக ஊழல் பட்டியலின் 2ஆவது பாகம் தயாராக உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்துப் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். டி.ஆர்.பாலு எம்.பி தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜூலை 14-ம் தேதி ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து இன்று பாஜக தலைவர் அண்ணாமலை, சைதாப்பேட்டை பெருநகர 17வது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஊழலுக்கு எதிராக மூன்றாம் தலைமுறைக்கும் முதல் தலைமுறைக்கும் யுத்தம் நடந்து வருகிறது. திமுக கோப்புகளை ஏப். 14ம் தேதி வெளியிட்டத்தில் இருந்து அனைத்து திமுகவினரும் கோபத்தில் இருந்தார்கள். டி.ஆர்.பாலு முன்னதாகவே நீதிமன்றத்தில் வந்து சத்தியப் பிராமணம் செய்துவிட்டு சென்று இருக்கிறார். மூன்று நிறுவனத்தில் மட்டும்தான் பங்குதாரராக இருக்கிறேன் என்று டி.ஆர் பாலு சொல்லி இருந்தார். பாஜக வழக்கறிஞர்கள் அணி பாலமாக உள்ளது. இன்று தான் அதை பார்த்தேன். ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரம் ஆஜராக சொல்லி இருக்கிறார்கள்.

திமுக ஊழல் பட்டியல் தொடர்பாக பாகம் இரண்டு தயாராக உள்ளது. பினாமி பெயரில் வாங்கி இருக்கக் கூடிய பட்டியல்கள் இருக்கின்றன. அவர்கள் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். நான் வெளியிட இருக்கிற பினாமிகள் அனைவரும் திமுகவினருக்கு சொந்தமானவர்கள் தான். ரத்த சொந்தமும் இருக்கிறது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இருக்கின்றன. பாகம் 2 பாதயாத்திரைக்கு முன்பாக ஜூலை மாதத்துக்குள் வெளியிடப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE