இபிஎஸ் மீதான புகாரை விசாரிக்க அனுமதித்தது ஏன்? - உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளதால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் மீண்டும் விசாரிக்க அனுமதி அளித்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த, 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இந்த வழக்கு, நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, எட்பபாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், "ஏற்கெனவே தாக்கல் செய்யபட்ட அரம்பக்கட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்பவர் விசாரணை அதிகாரி இல்லை. லஞ்ச ஒழிப்பு துறை அளிக்கும் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறை மட்டுமே அவருக்கு உள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி, புகாருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்த பிறகு, அதை ஆராய தேவையில்லை" என்று வாதிட்டார்.

அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "பொது ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டுடன் புகார் வந்தால் அதை விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என கடந்த 2018-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் ஆணையர் ஏற்கவில்லை. மீண்டும் புதிதாக விசாரணை நடத்த அனுமதித்துள்ளது" என்று வாதிட்டார்.

ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், "2018-ல் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் முடிவில், மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE