கழனிவாசல் விஏஓ மீதான இலவச வேட்டி சேலை பதுக்கல் வழக்கு ரத்து

By கி.மகாராஜன் 


மதுரை: இலவச வேட்டி சேலை பதுக்கியதாக கழனிவாசல் கிராம நிர்வாக அலுவலர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்குடியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அருள்ராஜ். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 'சிவகங்கை மாவட்டம் கழனிவாசலில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தேன். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்ததால் எனக்கு கொலை மிரட்டல் வந்தது. இதனால் பாதுகாப்பு கோரி 2016-ல் போலீஸாரிடம் மனு அளித்தேன். இதனால் என்னை தூதை கிராம நிர்வாக அலுவலராக இடமாறுதல் செய்தனர்.

இந்த இடமாறுதலை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இடமாறுதல் உத்தரவுக்கு தடையாணை பெற்றேன். இதனால் உயர் அதிகாரிகள் என்னை பழிவாங்கும் நோக்கத்தில் எனக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளை மக்களுக்கு வழங்காமல் வீட்டில் பதுக்கி வைத்ததாகவும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தததாகவும் என் மீது 2017-ல் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கால் என்னை பணியிடை நீக்கம் செய்தனர். இந்த வழக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகும். எனவே வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி சதி குமார சுகுமார குருப் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், ''மனுதாரர் நேர்மையானவர். இதனால் அவர் உயர் அதிகாரிகளால் தொடர்ந்து பழிவாங்கப்பட்டுள்ளார். அரசு வழங்கும் இலவச வேட்டி சேலைகளுக்கு கிராம நிர்வாக அதிகாரிகள் பொறுப்பாக மாட்டார்கள். இந்த வழக்கு முற்றிலும் பொய்யாக தொடரப்பட்ட வழக்கு என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என்றார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''மனுதாரர் மீதான வழக்கில் காரைக்குடி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கை ரத்து செய்யக்கூடாது'' என்றார். இதையடுத்து நீதிபதி, ''மனுதாரர் கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே. இலவச வேட்டி சேலைக்கு அவர் மீது மட்டுமே பொறுப்பு சுமத்த முடியாது. இலவச வேட்டி சேலைகளுக்கான பொறுப்பு அலுவலர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஆவார். எனவே, அரசின் இலவச வேட்டி சேலைகளை பதுக்கியதாக மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE