எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில், காவல் துறையினர் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. தனது தேர்தல் வேட்பு மனு மற்றும் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால் அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யவும், இது குறித்து மே 26-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு குறித்து காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த உத்தரவை மீறி, சேலத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் தனது கணக்கு குறித்த விவரங்களை கேட்டுப் பெற்றுள்ளதாக கூறி, சேலம் மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி, உதவி ஆய்வாளர் குணசேகர் ஆகியோருக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "ஈரோட்டில் 1973-76ம் ஆண்டுகளில் தான் படித்த ஸ்ரீவாசவி கல்லூரிக்கு போலீஸார் கடிதம் எழுதியுள்ளனர். இந்த வழக்கை பெரிதுபடுத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வது நீதிமன்ற அவமதிப்பு செயல். எனவே சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளையும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், சேலம் மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி, உதவி ஆய்வாளர் குணசேகர் ஆகியோர் தங்கள் செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான சேலம் குற்றப்பிரிவு காவல் துறையில் பதிவு செய்துள்ள தேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில் விசாரணையை நடத்தி இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, காவல் துறை விசாரணை நடத்த தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE