மதுரை: மாநகராட்சிப் பணிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து சிஐடியு மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தினர் மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மைப்பணி உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை தனியார் மயமாக்க பிறப்பித்துள்ள அரசாணை எண்: 152-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு, மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் இன்று மதுரை அண்ணா பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. இதற்கு மதுரை சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.தெய்வராஜ் தலைமை வகித்தார். இதனை அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரா.லெனின் துவக்கி வைத்தார்.
கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சி.சுப்பையா, மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ம.பாலசுப்பிரமணியம் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஜே.லூர்துரூபி, மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
» தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை: அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்
மேலும், குறைந்தபட்ச ஊதிய அரசாணை எண்: 36 (2டி)ன்படி அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அண்ணா பேருந்து நிலையம் முன்புள்ள சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். இதனால் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதித்தது.