சென்னை: மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி, சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துக்கோன் திருவுருச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக தனது தனது ட்விட்டர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நிலத்தின் தலைவணங்கா வீரத்துக்கும் தலைசான்ற தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாக விளங்கும் மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளும் கிளர்ந்தெழுவதற்கு முன்பே அதைச் செய்து, விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ்மங்காது ஒளிவீசிடும்!" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.