முதல்வர் ஸ்டாலினுக்கு எதற்காக திடீர் பயம்? - வானதி சீனிவாசன் கேள்வி

By க.சக்திவேல்

கோவை: எந்த ஒரு மாநில அரசையும் ஜனநாயகத்துக்கு விரோதமாக கலைக்க பாஜகவுக்கு உடன்பாடு இல்லை என எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை ராம்நகர், ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவிகளுக்கான இலவச ரத்த சோகை, சர்க்கரை அளவு பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. இதனை தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: ''திருமண விழா மேடைகளை எதிர்க் கட்சிகளை திட்டுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்துகிறார். ஆட்சிக்கு ஆபத்து வந்தால் கூட பரவாயில்லை என முதல்வர் பேசி இருக்கிறார்.

அரசியல் அமைப்பு சட்டத்தின்படி ஒரு மாநில அரசை கலைப்பதற்கு என்ன காரணங்களை கூறுவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதோ, அதுவெல்லாம் இந்த மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறாரா?

எந்த ஒரு மாநில அரசையும் ஜனநாயகத்துக்கு விரோதமாக கலைக்க பாஜகவுக்கு உடன்பாடு இல்லை. அப்படி எந்த ஓர் ஆட்சியையும் கலைக்கவும் இல்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுகளை எப்போதும் பின்பற்ற வேண்டுமென பாஜக அரசு நினைக்கிறது. எதற்காக முதல்வருக்கு இந்த திடீர் பயம் வந்திருக்கிறது என தெரியவில்லை. மணல் கடத்தல், மதுவால் ஒவ்வொரு நாளும் உயிரழக்கும் மக்கள், அரசு அலுவலகங்களில் பெறப்படும் லஞ்சம், சட்டம் - ஒழுங்கு போன்றவற்றில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.

குடியரசு தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதி இருப்பது முழுவதும் கற்பனை. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஆளுநர் அலுவலகம் உரிய பதில் கொடுப்பதால் முதல்வருக்கு கோபம் வருகிறது. கட்சி அரசியலுக்குள் ஆளுநர்கள் யாரும் வருவதில்லை. அதை நாம் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். எனக்கும், அண்ணாமலைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை, அக்கவும், தம்பியுமாக ஒற்றுமையாக கட்சியை வளர்க்கிறோம்'' என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE