நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: ஜூலை 14-ல் திமுக எம்பிக்கள் கூட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரையொட்டி, திமுக எம்பிக்கள் கூட்டம் வரும் 14-ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 14-7-2023 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 20-ல் தொடக்கம்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மே மாதம் 28-ம் தேதி தொடங்கி வைத்தார். மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு நடைபெற்றால், எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப அதிக எண்ணிக்கையில் இருக்கைகளுடன் நாடாளுமன்ற கட்டிடம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது.

டெல்லியில் கொண்டுவரப்பட்ட இந்த அவசர சட்டத்தை எதிர்த்து ஆம் ஆத்மி அரசுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. எனினும், பொது சிவில் சட்டத்தை கொள்கை ரீதியாக ஆதரிக்கிறோம் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் மத்தியில் முழு ஒற்றுமை இல்லாத நிலையே உள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மழைக்கால கூட்டத் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, பொது சிவில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால், அதை கடுமையாக எதிர்க்க பல்வேறு தலைவர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE