சென்னை: நடிகர் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது தொடர்பாக நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை. எனவே தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதில் விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுசுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இதை வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகர் தனுஷ், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், இன்று (ஜூலை 10) தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.