பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பவர்கள் - ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் கருத்து

By ஆ.நல்லசிவன்

பழநி: பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள், பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பவர்களாக கருதப்படுவார்கள் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் நேற்று (ஜூலை 8) மாலை பழநி தண்டாயுதபாணி நிலையத்துக்கு வந்தார். அவரை, பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், வருவாய் கோட்டாட்சியர் சரவணன், வட்டாட்சியர் பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, ரோப் கார் மூலம் மலைக்கோயில் சென்று சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு ராஜ அலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். இதன்பின், இரவு 7.00 மணிக்கு தனது குடும்பத்தினருடன் தங்க ரதம் இழுத்து வழிபட்டார்.

முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இறைவன் ஒருவனே. அவரை, அவரவர் விருப்பப்படி பழநி முருகனாக, பிள்ளையார்பட்டி விநாயகராக, காசி சிவனாக, திருப்பதி வெங்கடாஜலபதியாக, இயேசுவாக, அல்லாவாக வழிபட முழுமையான உரிமை இருக்கிறது. அதுதான் உண்மையான மதச்சார்பற்ற தன்மை. இந்த கடவுள் பெரிது, அந்த கடவுள் பெரிது என சொல்கிறவர்கள் மதச்சார்பின்மையை கடைபிடிக்காதவர்கள். பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள், பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பவர்களாக கருதப்படுவார்கள்.

சமுதாயத்துக்கு எது நல்லதோ அதை ஒரு மனதாக எல்லோரும் ஆதரிக்க வேண்டும். எது சமுதாயத்துக்கு எதிராக இருக்கிறதோ, அதை அனைவரும் எதிர்க்க வேண்டும். தமிழக அரசு, ஆளுநரை அரசியல் சாசன காவலனாக பார்க்க வேண்டும். அதேநேரத்தில் தன்னுடைய அணுகுமுறையை தமிழக அரசு மாற்றுகிறபோது, தானாக ஆளுநரின் அணுகுமுறையும் முழுமையாக தமிழகத்தின் நலனில் திரும்பும். தமிழக நலனில் அசைக்க முடியாத ஆர்வமுடையவர் ஆளுநர் ரவி என்று நான் கருதுகிறேன்" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE