சென்னை: பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ. இளையபெருமாள், அரசு தரப்பில் ப்ளீடர் பி. முத்துக்குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர். அனிதா ஆகியோர் ஆஜராகினர்.
அரசு தரப்பு வாதத்தில், "மூத்த குடிமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களின் விவரத்தை சேகரித்து வைக்கவும், அவர்கள் ஏதேனும் புகாரளித்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்து, அதனை தீர்த்து வைக்கவும் தமிழக டிஜிபி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.
» 'மாமன்னன்' 9 நாட்களில் ரூ.52 கோடி வசூல்: உதயநிதி தகவல்
» ரிஷப் ஷெட்டி அறக்கட்டளை தொடக்கம்: பிறந்தநாளில் கணவருக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்
மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.