கோவை டிஐஜி விஜயகுமார் உடல் தேனியில் தகனம்: அமைச்சர், டிஜிபி, அதிகாரிகள் அஞ்சலி

By என்.கணேஷ்ராஜ்

தேனி: தற்கொலை செய்துகொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு, தேனியில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி, காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். காவல் துறை மரியாதைக்குப் பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தற்கொலை செய்துகொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார் உடல் கோவையில் கூடற்கூறு சோதனைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தேனி ரத்தினம்நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. டிஐஜி விஜயகுமாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க டிஜிபி சங்கர் ஜிவால் சென்னையில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் மதுரை வந்தார். மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் காவல் துறை அதிகாரிகளுக்கான இல்லத்தில் தங்கினார். டிஜிபியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மதுரை வந்த சங்கர் ஜிவாலை மாநகர் காவல் ஆணையர் நரேந்திரன்நாயர், தென்மண்டல ஐஜி.அஸ்ரா கார்க், எஸ்.பி சிவபிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தேனிக்கு காரில் வந்த அவர், டிஐஜி விஜயகுமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கோவை மேற்கு, மதுரை தென்மண்டல ஐஜி.க்கள் சுதாகர், அஸ்ராகார்க், திண்டுக்கல், திருச்சி சரக டிஐஜி.கள் அபிநவ்குமார், சரவணசுந்தர், திண்டுக்கல், தேனி எஸ்பி.க்கள், பாஸ்கரன், பிரவீன்உமேஷ்டோங்கரோ உட்பட ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்திய நிலையில், டிஐஜி விஜயகுமார் உடல் தகனத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டது. உடலை காவல் துறை அதிகாரிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றினர். ரத்தினம் நகரில் இருந்து கிளம்பிய ஊர்வலம் பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம், பெரியகுளம், கம்பம் சாலைவழியே தேனி நகராட்சி பொது மயானத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான பொதுமக்களும், காவல் துறை அதிகாரிகள் உடன் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

பின்பு தேனி நகராட்சி பொதுமயானத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் 21 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிஐஜி விஜயகுமார் உடலுக்கு மகள் நந்திதா இறுதி சடங்குகளைச் செய்த பின் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்தவர் சி.விஜயகுமார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு சென்று விட்டு காலை 6.50 மணிக்கு தனது முகாம் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் தனது பாதுகாவலர் ரவியிடம் இருந்த கைத்துப்பாக்கியை வாங்கி தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு சக காவலர்கள் வந்து பார்த்த போது டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. | இணைப்பு > கோவை சரக டிஐஜி விஜயகுமாருக்கு அதிகாரிகள், தலைவர்கள் அஞ்சலி | போட்டோ ஸ்டோரி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE