கோயில்கள் தொடர்பாக 7 பொதுநல வழக்குகள் - மனுதாரர் ரூ.3,50,000 டெபாசிட் தொகை செலுத்த ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கோயில்கள் தொடர்பாக 7 பொதுநல வழக்குகள் தொடர்ந்துள்ள ரங்கராஜன் நரசிம்மன் என்பவரது நேர்மைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை வைப்புத் தொகையாக செலுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கோயில் தொடர்பாக பொதுநல வழக்குகள் தொடர்ந்து வரும் திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 7 பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். தக்கார் நியமனம், தக்கார்களின் முன்னிலையில் உண்டியல் திறக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்த வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.

இந்த 7 வழக்குகளும் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி அதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் எந்த கோயிலின் பக்தர்? என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த மனுதரார் ரங்கராஜன் நரசிம்மன், நான் எல்லா கோயில்களின் பக்தர்தான் என்று பதிலளித்தார்.

அப்போது நீதிபதிகள், மனுதாரர் தனது நேர்மைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் வழக்கு ஒன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் என 7 வழக்குகளுக்கும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

மனுதாரர் தாக்கல் செய்துள்ள வழக்குகள் நியாயமானதுதான் என நிரூபணமானால் மட்டுமே அந்த தொகை அவருக்கு திரும்ப அளிக்கப்படும். இல்லையென்றால் அந்த தொகை அபராதமாக எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை வைப்புத் தொகையாக தொகையை செலுத்திய பிறகு அவரது வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE