அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை - சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது, அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தில் வசித்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றிவிட்டு, போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை தனது மாமியார் சரஸ்வதி பெயருக்கு பதிவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, சார் பதிவாளர் புரு பாபு, பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, தற்போதைய சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கென்னடி, சந்திரசேகரன், கண்ணப்பன், ஸ்ரீகாந்த், சைதை கிட்டு, ஜோதி ஆகிய 10 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2003-ம்ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பொன்முடி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம், 2007-ல் வழக்கில் இருந்து பொன்முடியை விடுவித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொன்முடியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கடந்த 2017-ல் ரத்து செய்தது.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட சரஸ்வதி, புரு பாபு, சைதை கிட்டு ஆகியோர் காலமாகிவிட்டதால், மற்றவர்கள் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜரத்தினம் உட்பட 90-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதி ஜி.ஜெயவேல் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இதையொட்டி, நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் ஆஜராகினர்.

‘‘இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட 7 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் அரசுத் தரப்பில் சரிவர நிரூபிக்கப்படவில்லை’’ என்று கூறி, 7 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE