முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு - சட்ட அமைச்சரின் கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு தொடர்பாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

‘முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கான இசைவு ஆணையையும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதலையும் விரைவாக வழங்க வேண்டும்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்ட அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதி இருந்தார்.

இதுபற்றி ஆளுநர் மாளிகை நேற்று அளித்த விளக்கம்: கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் குறித்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளன. கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்த வழக்கில், விசாரணை அறிக்கையை மாநில அரசு அளிக்காததால் மேல் நடவடிக்கை குறித்து முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பாக மாநில அரசிடம் இருந்து எந்த கோரிக்கையும் ஆளுநர் மாளிகைக்கு வரவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE