இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் தாயகம் திரும்பினர்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் தாயகம் திரும்பினர்.

கடந்த ஜூன் 19-ம் தேதி ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற கலையரசன் என்பவரது விசைப்படகு இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பழுதாகி நின்றது. பின்னர்,அந்த படகு இலங்கை கடல் பகுதிக்குள் சென்றது. படகிலிருந்த அந்தோணி ஜான்சன், சேசுராஜ், மரிய ரூபன், முத்து, அந்தோணி பிரபு, லெனின், ஜேக்கப், ஜேம்ஸ் பிரதீப், அந்தாணி ஆகிய 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ஜூன் 21-ம் தேதி மீனவர்கள் 9 பேரும் யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதன் பின்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், படகு பழுதான நிலையில் காற்று வீசியதால் எல்லை தாண்டி வந்தது உறுதியானது. இதையடுத்து 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி கஜநீதிபாலன் உத்தரவிட்டார்.

விமானத்தில் வருகை: இந்நிலையில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 பேரும் நேற்று காலை கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அவர்களை தனி வாகனம் மூலம் ராமேசுவரத்துக்கு மீன்வளத் துறையினர் அழைத்து வந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE