மதுரை: “பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினர்கள். அப்படி ஏதும் உண்மை அல்ல” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு இன்று வருகை தந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து கூறியது: “மனித உரிமை மீறல்கள் நிறைய நடக்கின்றன. இந்தக் கவலரங்களுக்குப் பின்னணியில் சீன ஆதரவும் உள்ளது. பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்று பார்க்கவில்லை; அவர் உடனே சென்று இப்பிரச்சினையை சரிசெய்ய முயற்சி வேண்டும்.
பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தைப் பொறுத்தவரையில், அனைவரும் சேர்ந்து வந்தால் வெற்றிபெற வாய்ப்புள்ளது. நரேந்திர மோடி பிரதமராக இருந்த காலத்தில் எதுவும் செய்யவில்லை. நமக்கு ஓட்டுப் போடும் இந்துத்துவாவுக்கு மறுமலர்ச்சி கொண்டுவர முயற்சிகள் செய்தோம். அனைத்து இந்துக்களையும் ஒற்றுமையாக்க முயற்சி செய்தோம். இந்து ஒற்றுமை முயற்சிகளுக்காகத்தான் பாஜகவுக்கு ஓட்டு கிடைத்தது. மற்றபடி பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினார்கள். அப்படி ஏதும் உண்மை அல்ல. மோடி எதுவும் செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகிறார்கள்
வெள்ளைக்காரர்கள், முஸ்லிம்கள் நமது கலாச்சாரத்தை கெடுத்து விட்டுச் சென்றனர். அதை மீட்பதற்கு மறுமலர்ச்சியை, ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என இந்துக்களிடம் எண்ணம் வந்துள்ளது. அதற்காக நமக்கு ஓட்டு கிடைக்கும்.
» அண்ணாமலை நடத்தி வைத்த திருமண நிகழ்வில் பங்கேற்ற அதிமுக நிர்வாகி நீக்கம்
» வார இறுதி, முகூர்த்த நாட்களையொட்டி வெள்ளிக்கிழமை 800 சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் பற்றி கேட்கிறீர்கள். தேவர் என்பதைத் தவிர முத்துராமலிங்கத் தேவர் நாட்டின் விடுதலைக்காக போராடியவர். ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். மதுரை விமான நிலையத்துக்கு அவர் பெயர் வைக்காததில் எனக்கு மிகவும் வருத்தம். இன்று ஆட்சியில் யார் இருந்தாலும் அதற்கு ஆதரவு தரவில்லை. திமுக, அதிமுக யாரும் அதை ஆதரிக்கவில்லை. இவர்கள் கடிதம் கொடுத்தால் நாடாளுமன்றத்தில் பேசி மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க ஏற்பாடு செய்வேன். இரு கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் பொறாமையில் பேசி செயல்படுகின்றனர்'' என்று சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
.