வார இறுதி, முகூர்த்த நாட்களையொட்டி வெள்ளிக்கிழமை 800 சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு ஜூலை 7-ம் தேதியன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “ஜூலை 8 (இரண்டாம் சனிக்கிழமை) மற்றும் ஜூலை 9 (ஞாயிறு) ஆகிய விடுமுறை, முகூர்த்த நாட்களை முன்னிட்டு, நாளை ஜூலை 7 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு நாளை ஜூலை 7-ம் தேதியன்று, தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து அதாவது, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்காக இதுவரை 23,626 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE