சென்னை: "பட்டியலினத்தைச் சேர்ந்த சட்டப்பேரவைத் தலைவராக இருந்த தனபாலை இருக்கையில் இருந்து இழுத்து கீழே தள்ளி, மைக்கை உடைத்து, மேஜைகளை உடைத்து பெரும் ரகளையில் ஈடுபட்டு, அந்தப் புனிதமான இருக்கையில் அமர்ந்த கட்சிதான் திமுக" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் மாமன்னன் திரைப்படத்தில், முன்னால் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "மாமன்னன் படம் ஓடினால் என்ன? ஒடவில்லை என்றால் என்ன? இதுவா நாட்டு மக்களுக்கு தேவை. இதுவா வயிற்றுப்பசியை போக்கப் போகிறது? இதில் நிறைய விமர்சனம் வேறு. மாமன்னன் படத்தில், ஒரு வேதனைக்குரிய விசயம். ஊடகங்களும், செய்தித்தாள்களிலும் நிறைய பெரிது பெரிதாக எழுதுகின்றனர். என்னவோ, இவ்வளவு நாள் பட்டியலின மக்களுக்கு இந்தத் திரைப்படத்தின் மூலம் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அது உண்மையில்லை, பொய்.
» மதுரையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் கைது
» ரோஜர் ஃபெடரர் புகைப்படத்துக்கு விம்பிள்டனின் கேப்ஷன் - தமிழ் ரசிகர்கள் உற்சாகம்
நான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டப் பிறகு, ஆளுநர் உத்தரவுப்படி எங்களுடைய அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் தனபால், பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டினார். அவ்வாறு நான் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் தனபால். அவரை இருக்கையில் இருந்து இழுத்து கீழே தள்ளி, மைக்கை உடைத்து, மேஜைகளை உடைத்து பெரும் ரகளையில் ஈடுபட்டு, அந்த புனிதமான இருக்கையில் அமர்ந்த கட்சிதான் திமுக. இதை மறந்துவிடாதீர்கள்.
இவர்களா பட்டியலின மக்களுக்கு நன்மை செய்கின்றனர்? பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாப்பவர்களா இவர்கள்? பட்டியலின வகுப்பைச் சேர்ந்த உயர்ந்த பதவியில் இருக்கின்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றுகின்ற மாமன்றத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த சட்டப்பேரவைத் தலைவரை இழுத்து கீழே தள்ளி, அவருடைய சட்டையெல்லாம் கிழித்து, மேஜை நாற்காலிகளை எல்லாம் உடைத்தெறிந்த சம்பவம் அனைத்து தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. அதை ஏன் ஊடகங்கள் ஒளிபரப்பவில்லை?
அவர் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த சட்டப்பேரவைத் தலைவர். அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறீர்கள். அவரை அந்த இருக்கையில் இருந்து கீழே கொண்டுவந்து எங்களோடு அமர வைத்தீர்களா, இல்லையா? திமுக தலைவருக்கும், திமுகவுக்கும் என்ன தகுதி இருக்கிறது, பட்டியலின சமூகத்தைப் பற்றி பேசுவதற்கு? அதிமுக மட்டும்தான் சாதிக்கும், மதத்துக்கும் அப்பாற்பட்ட ஒரே கட்சி.
இன்று பட்டியலின பழங்குடியின மக்கள் ஏற்றம் பெறுவதற்கு காரணம் மறைந்த முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்ததுதான். கல்வியில் பட்டியலின மக்கள் சிறந்து விளங்க காரணம் அதிமுக அரசாங்கம். அதிமுக ஆட்சியில் நடந்த கல்விப் புரட்சியால்தான், இன்று கிராமத்திலிருந்து நகரம் வரை பட்டியலின மக்கள் உயர்கல்வி பட்டப்படிப்பு படிக்கும் சூழ்நிலையை உருவாக்கியது அதிமுக. வேறெந்த கட்சிக்கும் அதுப்பற்றி பேச அருகதையும், தகுதியும் கிடையாது" என்று அவர் கூறினார்.