சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு நாளை (வியாழக்கிழமை) 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.
மாறுபட்ட தீர்ப்பு: இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட நிலைபாட்டை எடுத்தனர். நீதிபதி நிஷா பானு, அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம். எனவே, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஆனால் நீதிபதி பரதட்சக்கரவர்த்தி, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. அவர் 10 நாட்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் எனக்கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
3வது நீதிபதி நியமனம்: இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து உத்தரவிட்டார்.
» சாக்கோட்டை வீரசேகரர் உமையாம்பிகை கோயில் ஆனித் தேரோட்டத்தில் பெண்கள் வழிபாடு
» சென்னையில் இரவு நேர போக்குவரத்துக்காக மேம்பாலங்களைத் திறக்க காவல் துறை முடிவு
நாளை விசாரணை: இந்த வழக்கை வியாழக்கிழமை அல்லது வெள்ளியன்று நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு வியாழக்கிழமை (ஜூலை 6) பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.