ஆதார் அட்டையை புதுப்பிக்க சொன்னதால் காரைக்குடி நகராட்சியில் குவிந்த மக்கள்

By இ.ஜெகநாதன்


காரைக்குடி: ஆதார் அட்டையை புதுப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தியதை அடுத்து, காரைக்குடி நகராட்சி ஆதார் மையத்தில் புதுப்பித்தலுக்காக அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் ஆதார் மையத்துக்கு தினமும் புதிதாக ஆதார் எடுக்க, பிழை திருத்தம், தகவல்கள் மாற்றம் உள்ளிட்ட காரணங்களுக்காக வருகின்றனர். சமீபத்தில் ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்குள் ஒருமுறையாவது புதுப்பித்திருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியது. மேலும் வங்கிகள், அஞ்சலகங்களில் இருந்த ஆதார் மையங்கள் முறையாக இயங்கவில்லை. இதனால் காரைக்குடி நகராட்சி ஆதார் மையத்தில் ஆதார் அட்டையை புதுப்பிக்க அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிகின்றனர். அவர்கள் பல மணி நேரம் காத்திருந்து, தங்களது பெயரை பதிவு செய்கின்றனர்.

பின்னர் அவர்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் மீண்டும் வந்து ஆதாரை புதுப்பிக்கின்றனர். குழந்தைகளுடன் வருவோர் அங்கேயே காத்திருந்து புதுப்பிக்கின்றனர். இதனால் கூடுதல் ஆதார் மையங்களை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து காரைக்குடியைச் சேர்ந்த திருஞானம் கூறியது: "மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், அனைத்து வங்கிகள், அஞ்சலகங்களில் ஆதார் மையங்கள் செயல்பட்டன. தற்போது ஒருசில வங்கிகள், அஞ்சலகங்களில் மையங்கள் செயல்படுகின்றன. அதுவும் எந்த வங்கி, அஞ்சலகம் என்ற விவரமும் தெரியவில்லை.

இதனால் நகர மக்கள் நகராட்சி அலுவலக மையத்துக்கும், கிராமப்புற மக்கள் வட்டாட்சியார் அலுவலக மையத்துக்கும் வருகின்றனர். தற்போது புதுப்பித்தலுக்காக ஏராளமானோர் வருவதால் கூட்டம் அதிகரித்தது. இதனால் கூடுதல் ஆதார் மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE