சென்னை: சென்னை - அண்ணா சாலையில் ரூ.621 கோடியில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்டச் சாலை அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் ஏ.வே.வேலு அறிவித்தார்.
இந்நிலையில், அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை ரூ.621 கோடி மதிப்பில் 3.5 கி.மீ தொலைவுக்கு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த உயர்மட்ட மேம்பாலம் நான்கு வழிச்சாலையாக அமைய உள்ளது.