வேளாண் பொருட்கள் விலை வீழ்ச்சிக்கு தீர்வு காண்க: டெல்லி கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்திய அரசின் சார்பில் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான விலை நிர்ணயக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், வேளாண் பொருட்கள் விலை வீழ்ச்சிக்கு தீர்வு காண வலியுறுத்தினார்.

வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான விலை நிர்ணயக் குழு கூட்டத்தின் தலைவரான விஜய்பால்சர்மா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது: ''விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு செலவில் 50 சதவீதத்தை கூடுதலாக உயர்த்தி லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும்.

நெல், கோதுமை ஏற்றுமதி இறக்குமதி கொள்கை இந்திய விவசாயிகள் உற்பத்தி பாதிக்காமல் முடிவு எடுத்திடுக. வேளாண் உற்பத்தி மிகைக் காலத்தில் அரிசி கோதுமை சர்க்கரை, உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஏற்றுமதிக்கு தடை விதிப்பதும், இறக்குமதிக்கு சலுகை அளித்து ஊக்கப்படுத்துவது ஏற்கதக்கதல்ல. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உலகப் பெரும் முதலாளிகள் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து இந்திய கிடங்குகளில் பதுக்கி வைத்துவிடுகின்றனர். அப்பொருள்களுக்கு விவசாயிகள் பெயரில் வங்கிகளில் சலுகைகளுடன் கடன்களைப் பெற்று வருகின்றனர்.

அவ்வாறு பதுக்கப்படும் உணவுப் பொருட்கள் உற்பத்தி குறைவு காலத்தில் வெளிச் சந்தையில் செயற்கையான போட்டியை உருவாக்கி பல மடங்கு விலையை உயர்த்தி விற்கின்றனர். தான் விரும்பும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வருகின்றனர். இதனால் உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பது தடுக்கப்படுவதோடு, உரிய சந்தை வாய்ப்புகளும் மறுக்கப்படுகிறது. எனவே மிகை உற்பத்தி காலத்தில் ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதை கைவிட்டு தேவையான பொருட்களை மட்டும் இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும்.

உலகளாவிய சந்தையில் போட்டி போட்டு விற்கும் நிலையை விவசாயிகளுக்கு ஏற்படுத்திட வேண்டும். பருத்தி. தேங்காய் உள்ளிட்ட வேளாண் உற்பத்திப் பொருட்கள் மிகப்பெரும் விலைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பருத்தி கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் ரூ 5 முதல் 6 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பருத்தி மிகை உற்பத்திக் காலத்தில் இறக்குமதிக்கு வரிச்சலுகை அளித்து ஊக்கப்படுத்துவதை கைவிட வேண்டும். மத்திய அரசு நிர்ணயத்துள்ள விலைக்கு குறைவில்லாமல் கொள்முதல் செய்வதை உறுதி செய்திட வேண்டும். தேங்காய் மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருளாகும். இதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்டு உணவு பொருட்களாக உற்பத்தி செய்திட வேண்டும். தேங்காய் எண்ணெய் உடல் நலத்தை பாதுகாக்கும் வலிமை கொண்டது.

எனவே, இந்திய பொதுச் சந்தையில் உடல் நலத்தை கெடுக்கக்கூடிய பாமாயில். சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றின் பயனபாட்டை குறைத்திட வேண்டும். அதற்கு மாற்றாக பொது விநியோகத் திட்டத்திலும், மருத்துவமனைகள். ஊட்டச்சத்து மையங்கள் பொதுச்சந்தைகளிலும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதை ஊக்கப்படுத்திட வேண்டும். இந்திய அரசு 2023 ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவித்துவிட்டு செயற்கை முறையில் உலக பெரும் முதலாளிகள் லாபம் பெறும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியை பொது விநியோக திட்டத்தில் விற்பனை செய்வதை இந்திய அரசு கைவிட வேண்டும். சிறு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதனை லாபகரமான விலையில் சந்தைப்படுத்துவதற்கான உத்தரவாதத்தை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.

உலகளாவிய சந்தையில் உரத்திற்கான மூலப் பொருட்கள் விலை உயர்வை காரணம் காட்டி இந்திய சந்தையில் பல மடங்கு விலையை உயர்த்தி கொள்ளை லாபம் அடித்து வருகிறார்கள். நடப்பாண்டு இந்திய அரசு 1.25 லட்சம் கோடியை உரத்திற்கான மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் மானியம் முழுமையும் விவசாயிகள் பயன்பெற முடியவில்லை. இதிலிருந்து பாதுகாக்க உரத்திற்கான மானியம் விவசாயிகளுக்கு நேரடியாக சென்றடைவதை மத்திய அரசு வெளிப்படைத் தன்மையோடு உறுதிப்படுத்த முன் வர வேண்டும். இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களை உலகளாவிய சந்தையில் லாபகரமான விலையில் விற்பனை செய்வதற்கும் இந்திய சந்தையில் பதுக்கல் காரர்களுக்கு இடம் இன்றி லாபகரமான விலையில் சந்தைப்படுத்துவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் முன்வர வேண்டும்.

குறிப்பாக உற்பத்தியில் வணிகர்களும் சிறு குழு தொழில் முதலீட்டாளர்களும் பங்கேற்கும் வகையில் விவசாயிகள் உள்நாட்டு வணிகர்கள் ஏற்றுமதியாளர்கள் சிறு குறு தொழில் முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய உற்பத்தியாளர் குழுக்களை கிராமங்கள் தோறும் உருவாக்கிய வேண்டும். அதன் மூலம் சந்தைப்படுத்துவதையும் தேவைக்கேற்ப ஏற்றுமதி செய்வதையும் இடைத்தரகர்கள் இன்றி நடைபெற வழி காண வேண்டும். இந்தியா முழுமையிலும் காரிப், ரபி பருவத் கொள்முதல் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவ மழையை முழுமையாக பெறக்கூடிய மாநிலமாகும். பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரும் பேரழிவை சந்தித்து வரும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானதாக உள்ளது. மத்திய அரசின் காரிப் ரபி பருவ கொள்முதல் முறைகள் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பருவ காலத்திற்கு ஏற்ப பொருத்தமானதாக இல்லை.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பருவ கால கொள்முதல் கொள்கைகளை அந்தந்த மாநிலங்களின் தேவைக்கேற்ப கொள்கை நடைமுறைகளை வகுத்திட சிறப்பு அனுமதிகளை மத்திய அரசு வழங்கி கண்காணித்திட வேண்டும். நபார்டு வங்கி வேளாண் வளர்ச்சியை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட நிதி நிறுவனமாகும். ஒதுக்கப்படுகிற நிதி பெரும் பகுதியான அளவில் வேளாண்மை வளர்ச்சி என்கிற பெயரில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள், பாலங்கள், பள்ளி கல்லூரி, மருத்துவமனை, அலுவலக உள்ளிட்ட கட்டிட கட்டுமான பணிகளுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை கொடுத்து 70% நிதிகளை பயன்படுத்தி வருகின்றனர். வேளாண் மேம்பாட்டிற்காகவும், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தோடும் வேளாண் வளர்ச்சிக்கான வகையில் ஒதுக்கீடு செய்யப்படும் நபார்டு நிதியை வேளாண் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாற்றுத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதை தடுத்து நிறுத்திட மத்திய அரசு முன் வர வேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், பாரதிய கிசான் யூனியன் சார்பில் ஹரியானா சுவாமி இந்தர் உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட பல்வேறு விவசாயிகள் சங்க தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE