மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை பிச்சை போடுகிறோம் என்பதா? - அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைத்தது கருணாநிதி போட்ட பிச்சை என்று அமைச்சர் எ.வ.வேலு பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "தென்மாவட்ட மக்கள் வழக்கு நடத்துவதற்கு அதிகம் செலவு செய்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வரவேண்டிய தேவை இருந்தது. அதனால், மத்திய அரசிடம் போராடி மதுரைக்கு உயர்நீதிமன்றக் கிளையைக் கொண்டு வந்தது, முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்ட பிச்சை." என்று தெரிவித்தார்.

இந்த பேச்சுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்றார் திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி. சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைத்தது, கருணாநிதி போட்ட பிச்சை என்கிறார் அமைச்சர் எ.வ. வேலு.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று கூறி, வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது. தொடர்ந்து பொதுமக்களை அவமானப்படுத்தி வரும் திமுகவினரின் இது போன்ற அகங்காரமான பேச்சுக்களை, தமிழக பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE