தாம்பரம் | அகரம்தென் சாலையில் ஒளிராத மின்விளக்கு

By செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரம் அருகே அகரம்தென் சாலை சேலையூர் பகுதியில், தெருவிளக்கு அமைத்தும் மின் இணைப்பு கொடுக்காததால் ஒளிரவில்லை. இதற்கு தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமே காரணம் என புகார் எழுந்துள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான அகரம்தென் 6 வழி சாலையில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமில்லாததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் மையப்பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ. 55 லட்சத்தில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் 33 கம்பம் அமைக்கப்பட்டு மின்விளக்கு பொருத்தப்பட்டன. ஆனால், இந்த மின்விளக்கு பொருத்தி 6 மாதம் ஆகியும் தற்போது வரை தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் மின் இணைப்பு பெற போதிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அப்பகுதியில் நடைபயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் வாகனத்தில் செல்வோர் பாதிக்கபடுகின்றனர். இது குறித்து இந்து தமிழ் திசை நாளிதழ் உங்கள் குரல் பகுதியில் கிழக்கு தாம்பரத்தை சார்ந்த ராஜா கூறியதாவது: மின்விளக்கு பொருத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்தும், மின் இணைப்பு வழங்கவில்லை. இரவு நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்பகுதியில் நடந்து செல்லஅச்சப்படுகின்றனர். வாகன ஒட்டிகளுக்கும் இதே நிலைதான். அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன.

இதுபோன்ற சமயங்களில் மின்விளக்குக்கு மின் இணைப்பு வழங்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, விரைவில் மின் இணைப்பு பெற்று விளக்கு எரிய வைக்க உரிய ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு வாசகர் கூறினார்.

நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது: நெடுஞ்சாலை துறைசார்பில் மின்விளக்கு அமைக்கப்பட்டு மின் இணைப்பைப் பெற்று பயன்பாட்டுக்கு கொண்டுவர தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு 6 மாதத்துக்கு முன்பு கடிதம் அனுப்பப்பட்டுவிட்டது. மின் இணைப்புக்கு தேவையான டெபாசிட் தொகையும் எவ்வளவு என தெரிவித்தால் செலுத்த தயாராக இருக்கிறோம் எனவும் அதில் குறிப்பிட்டு உள்ளோம்.

மின் இணைப்பு பெற்று விளக்கை எரிய வைக்க மாநகராட்சி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தாம்பரம் மாநகராட்சி அதிகாரி கேட்டபோது நெடுஞ்சாலை துறை சார்பில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு இணைப்பைப் பெற்றுக் கொள்ளும்படி கடிதம் வழங்கியது உண்மைதான்.

இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினருடன் இணைந்து மாநகராட்சி சார்பில் கூட்டு ஆய்வு செய்யப்பட்டது. மின் இணைப்பு பெற வேண்டி அனைத்து ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் மின்வாரியத்திடம் மின் இணைப்பு வேண்டி மனு அளிக்கப்படும் என்றனர்.

இதேபோல் வெங்கம்பாக்கம் பகுதியில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு ஒன்றும் பயன்பாட்டுக்கு வரவில்லை. மின் இணைப்பு கொடுக்காததால் கடந்த ஓராண்டாக இந்த உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் காட்சி பொருளாகவே இருந்து வருவதாக இந்து தமிழ் திசை நாளிதழுக்கு உங்கள் குரல் பகுதியில் வாசகர் ஒருவர் தெரிவித்திருந்தார். இதுகுறித்த செய்தி கடந்த மாதம் 27-ம் தேதி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE