தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூலை 5) சில
இடங்களில் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் நாளை இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, வரும் 7, 8-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஜூலை 4-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 13 செ.மீ. சின்கோனாவில் 11 செ.மீ. வால்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரில் 8 செ.மீ. கோவை மாவட்டம் சோலையாறு, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE