குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் பன்றி பண்ணைகள் மாற்றப்படும் - உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

By செய்திப்பிரிவு

மதுரை: குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் பன்றி பண்ணைகளை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்ற கிளையில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தூத்துக்குடி உடன்குடியைச் சேர்ந்த காசிலிங்கம், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தூத்துக்குடி உடன்குடியில் குடியிருப்பு பகுதியில் சிலர் பன்றி பண்ணைகள் நடத்தி வருகின்றனர். மீன் கழிவுகள், கோழி கழிவுகள், அழுகிய தாவரங்கள் பன்றிகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது. இதனால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

பகல் நேரங்களில் பன்றிகள் சாலைகளிலும், தெருக்களிலும் திரிவதால் நெரிசல் ஏற்பட்டு வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. இரவில் பன்றிகளின் அலறல் சத்தம் பொதுமக்களின் நிம்மதியான உறக்கத்தை கெடுக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தால் பன்றி பண்ணை வைத்திருப்போருக்கு அபராதம் மட்டும் விதித்து விட்டு விடுகின்றனர்.

எனவே, உடன்குடியில் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவில் சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் பன்றி பண்ணைகளை வேறு இடங்களுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் பன்றி பண்ணைகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், பன்றி பண்ணைகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. மனுதாரரின் மனு மீது உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE