பர்கூர் மலைப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக்க எதிர்ப்பு: ஜூலை 6-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா, பர்கூர் மலைப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ள திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் வியாழக்கிழமை பர்கூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, பர்கூர் ஊராட்சியில் உள்ள 35 குக்கிராமங்களில் சுமார் 2000 ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள், 4000 லிங்காயத்து வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள் என்று சுமார் 18000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பர்கூர் ஊராட்சியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் ஆடு, மாடுகளை வனப் பகுதிகளில் மேய்ச்சல் செய்வதும், விவசாயம் செய்வதும் ஆகும். மேலும், வனப் பகுதிகளில் விளையக்கூடிய நெல்லிக்காய், சீமார்புல், கடுக்காய் முதலானவற்றை அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் வனக் குழுவின் மூலமாக, வனப் பகுதிக்குச் சென்று சேகரித்து வந்து அவைகளை விற்பனை செய்து வருமானம் ஈட்டி தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் திமுக அரசு, பர்கூர் மலைப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இனிவரும் காலங்களில் வனப் பகுதிகளில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுசெல்ல இயலாத சூழ்நிலையும், பழங்குடியினர் நெல்லிக்காய், சீமார்புல், கடுக்காய் போன்றவற்றை சேகரிக்க முடியாத சூழ்நிலையும் உருவாகும். அதேபோல், விவசாய நிலங்களில் விளையக்கூடிய பொருட்களை வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கும், மருத்துவ சிகிச்சைக்காக வாகனங்களை இயக்கவும் வனத் துறை அதிகாரிகள் தடை செய்யும் நிலைமையும் ஏற்படும். மேலும், மலைவாழ் மக்களுடைய விளை நிலங்களின் மதிப்பும் குறையும் சூழ்நிலை ஏற்படும். இதன் காரணமாக இப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழக்கும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, அந்தியூர் தாலுகா, பர்கூர் மலைப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ள திமுக அரசைக் கண்டித்தும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் அறிவித்துள்ள இத்திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், 6.7.2023 – வியாழக்கிழமை காலை 11 மணியளவில், அந்தியூர் தொகுதி, பர்கூர் ஊராட்சி, தாமரைகரை என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான K.A.செங்கோட்டையன், MLA தலைமையில் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஏழை, எளிய மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயப் பெருங்குடி மக்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு, திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்குமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE