தரநிலை விதிப்படி வரவு - செலவு அறிக்கை: மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி மீதமாகும்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் 2010-ல் மின்உற்பத்தி, பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ), மின் தொடரமைப்பு கழகம் (டான்டிரான்ஸ்கோ) ஆகிய நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டன. இவை இரண்டும் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் வருவதால், கடந்த 2017-18-ம் ஆண்டு முதல், இந்திய கணக்கு தரநிலை விதிகளின் அடிப்படையில் வரவு - செலவு அறிக்கையை தயாரிக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு மின்வாரியம் அதை பின்பற்றவில்லை. மாறாக, வழக்கம்போல மின்விநியோக சட்டவிதியை பின்பற்றியே அறிக்கையை தயாரித்தது.

இதில் குறைபாடு இருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை துறைதொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்து வந்தது. இதனால், இந்த 2 நிறுவனங்களும் தயாரித்த 2020-21-ம்ஆண்டு வரவு - செலவு அறிக்கைகளை மாற்றி அமைத்து, இந்திய கணக்கு தரநிலை விதிகளின்படி தயாரிக்கும் பணி கடந்த 2022-ம்ஆண்டில் தொடங்கியது. அறிக்கை தயாரிப்பு பணி தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது.

இந்திய கணக்கு தரநிலை விதிப்படி அறிக்கை தயாரித்தால், ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன், பவர் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மின்வாரியத்துக்கு வழங்கியுள்ள கடனுக்கான வட்டியை 0.5 சதவீதம் குறைக்கும். இதனால், மின்உற்பத்தி, பகிர்மானக் கழகத்துக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.350 கோடி வட்டி செலவு குறையும்.

கடனுக்கான வட்டி குறைப்பு: இதற்கிடையில், மின்தொடரமைப்பு கழகம், இந்திய தர நிலைப்படி 2020-21-ம் ஆண்டுக்கான வரவு - செலவு அறிக்கை தயாரிக்கும் பணியை சமீபத்தில் முடித்துள்ளது. இதன்மூலம், இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள கடனுக்கான வட்டி 0.5 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதால், ரூ.150 கோடி வட்டி மீதமாகியுள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE