மதுரை: மதுரை அருகே திருமோகூரில் சில தினத்துக்கு முன் கோயில் திருவிழா நடந்தது. இதையொட்டி நடந்த கலை நிகழ்ச்சியின்போது, இரு தரப்பு இளைஞர் களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறில் ஈடுபட்டவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அன்றிரவே அப்பகுதியிலுள்ள ஒரு தெருவுக்குள் புகுந்த கும்பல், 30க்கும் மேற்பட்ட டூவீலர்கள், கார் ஒன்றை அடித்து நொறுக்கியது. இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட 23 பேரை ஒத்தக்கடை போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையில், திருமோகூர் நொண்டக்கோயில் தெருவைச் சேர்ந்த செல்வம் (25) என்பவர் நேற்று மதியம் சுமார் 2 மணிக்கு திண்டியூர் கண்மாய் பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். மாடு மேய்க்கச் சென்றபோது, அங்கு டூவீலரில் வந்த 3 பேர் கம்பு போன்ற ஆயுதங்களால் தாக்கியதாக தெரிகிறது. முதுகு, தொடை பகுதியில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.
இதனிடையே, செல்வத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது தரப்பைச் சேர்ந்தோர் திருமோகூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தால் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு சென்று எஸ்பி சிவபிரசாத், டிஎஸ்பி சந்திரசேகர் ஆகியோரும் விசாரித்தனர். ஏற்கனவே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டோருக்கான ஜாமீன் மனு தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 4) விசாரணைக்கு வரும் நிலையில், இச்சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து திருமோகூர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
» காவலர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தல்
» சென்னை | பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அமைச்சர் தகவல்
போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘‘செல்வம் மாடு மேய்க்கச் சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் சென்ற கும்பல் தாக்கியதாக தெரிகிறது. தன்னை தாக்கியவர்களின் பைக்கை எடுத்துக் கொண்டு செல்வம் தப்பி இருக்கிறார். கும்பல் விரட்டியதால் வேறு வழியின்றி பைக் பாதியில் போட்டுவிட்டு தப்பியதாக செல்வம் கூறுகிறார். இதுபற்றி தொடர்ந்து விசாரிக்கிறோம்’’ என்றனர்.