அரசுப் பள்ளிகளில் விநாடி-வினா போட்டிகள்

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை.

மாணவர்களிடம் நிதிசார் கல்வியறிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கியால் அனைத்திந்திய அளவில் 8 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் விநாடி-வினா போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விநாடி-வினா போட்டி வட்டார, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்பட உள்ளது. அதில் //www.ncfe.org.in/ எனும் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள நிதிசார் கல்வி தொடர்பான விவரங்கள், வங்கிகள், பொருளாதாரம் தொடர்பான தற்போதைய நிகழ்வுகள், ஜி-20 அமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வினாக்கள் இடம்பெறும். எனவே, இந்தப் போட்டியில் பங்கேற்க, பள்ளி அளவில் சிறந்து விளங்கும் தலா ஒரு மாணவர், மாணவி அடங்கிய இரு நபர் குழுவை தேர்வு செய்து, வட்டார அளவிலானப் போட்டிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

மாவட்ட கல்வி அலுவலர்கள், இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து வட்டார அளவிலான போட்டிகளை ஜூலை 5-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். தொடர்ந்து, மாவட்ட அளவிலான போட்டிகள் ஜூலை 10 முதல் 12-ம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் நடத்தப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE