தேசிய மருத்துவர்கள் தினம் | மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவர்கள் தங்களின் தன்மையால் தேசத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மருத்துவர்கள் தினத்தில், அனைத்து மருத்துவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்களும் தங்களின் மிக உயரிய துணிச்சல், மிகுதியான அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மையால் நமது தேசத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், சுயசார்பாகவும் ஆக்குகிறீர்கள். மறுமலர்ச்சி இந்தியாவுக்கு பேரார்வத்தை ஏற்படுத்துபவர் தாங்களே." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, மனிதகுலத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றிவரும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முதல் நிலை களப்பணியாளர்களாக பணியாற்றி பெருந்தொற்றின் கோரப் பிடியிலிருந்து மனித உயிர்களை காப்பாற்றியதற்காக மருத்துவர்களுக்கு நன்றி சொல்வதற்கு ஏற்ற தருணம் இது.

தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றி மருத்துவர்களின் கடமை உணர்வை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறார்கள். நம் அனைவரது வாழ்விலும் மருத்துவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கொரோனா வெளிப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தன்னலமற்ற, ஈடு இணையில்லாத சேவையைப் போற்றுகின்ற, மதிக்கின்ற அதே வேளையில் நம்முடைய உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE