சென்னை: இனி மாணவர்களுடன் தனது பயணம் தொடரும் என்று ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழக காவல் துறையின் தலைவராக இருந்த டிஜிபி சி.சைலேந்திரபாபு ஜூன் 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். ஏற்கெனவே, ஓர் ஆண்டு பணி நீட்டிப்பு பெற்று தற்போது பணி நிறைவு செய்துள்ளார். பணி ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாவுக்கு பிரிவு உபசாரவிழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், டிஜிபி சங்கர் ஜிவால், சைலேந்திரபாபுவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
இந்நிலையில், மாணவர்களுடன் எனது பயணம் தொடரும் என்று ஓய்வு பெற்ற டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"காவல் துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். இனி மாணவர்களுடன் நமது பயணம். நீங்கள் ஆக முடியாது என்பது எதுவுமில்லை; வாங்க முடியாது என்பது ஏதுமில்லை, செய்ய முடியாது என்பதும் ஏதுமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.