இறையன்பு இன்றுடன் ஓய்வு - புதிய தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா யார்?

By செய்திப்பிரிவு

சென்னை: தலைமைச் செயலர் வெ.இறையன்பு இன்று ஓய்வு பெறுவதையடுத்து, தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலராக நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் சிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2021-ல் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே தலைமைச் செயலராக இருந்த ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, வெ.இறையன்பு புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் பணியாற்றிய நிலையில், இன்று அவர் ஓய்வுபெறுகிறார்.

இதையடுத்து, புதிய தலைமைச் செயலராக தற்போது நகராட்சி நிர்வாகத் துறைச் செயலராக உள்ளசிவ்தாஸ் மீனாவை நியமித்து, தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவித்துள்ளார். இன்று பிற்பகல் இறையன்பு ஓய்வுபெறும் நிலையில், புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்கிறார்.

சிவ்தாஸ் மீனா யார்?: 1989-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தானைச் சேர்ந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் படித்தவர். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1989-ல் ஐஏஎஸ் பணியில் சேர்ந்த அவர், முதலில் காஞ்சிபுரம் உதவி ஆட்சியராகப் பயிற்சி பெற்றார். 1991-ல் கோவில்பட்டி உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

1993-ல் வேலூர் கூடுதல் ஆட்சியராகவும், 1995-ல் கோவை கூடுதல் ஆட்சியராகவும் பணியாற்றினார். 1996 முதல் 98 வரை போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குநராக இருந்தார். 1998 முதல் 2001 வரை நாகை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார்.

2001 முதல் 2002 வரை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும், சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநராகவும் பணியாற்றினார். 2002 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை உணவுப்பொருள் வழங்கல் துணை ஆணையர், கூடுதல் ஆணையராகப் பணிபுரிந்தார். 2003 அக்டோபர் முதல் 2004 செப்டம்பர் வரை வெளிநாட்டுப் பயிற்சிக்கு சென்றார்.

2006 வரை உயர்கல்வித் துறை இணை ஆணையராகவும், 2008 வரை சென்னை குடிநீர் வாரிய இயக்குநராகவும், பின்னர் நகர்ப்புற வளர்ச்சி மேலாண் இயக்குநர், மின்வாரிய செயல் இயக்குநராகப் பணியாற்றினார்.

மீண்டும் 2009-10-ல் சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநராகவும், 2010-11-ல்மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநராகவும், 2011-12-ல் திட்ட செயலாக்கத் துறைச் செயலராகவும், வணிகவரிஆணையராகவும் நியமிக்கப்பட்டார். 2012-13-ல் வேளாண் துறை ஆணையராகவும், 2013-15 வரை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியாகவும் பணி யாற்றினார்.

2015-16-ல் கூட்டுறவு, உணவுத் துறைச் செயலராகவும், 2016-17-ல் முதல்வரின் செயலராகவும் பணியாற்றினார். 2017-ம் ஆண்டு முதல்வராக பழனிசாமி பொறுப்பு வகித்தபோது, மத்திய அரசுப் பணிக்கு சிவ்தாஸ் மீனா சென்றார். 2017-21 வரை மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் இணைச் செயலராகவும், பின்னர் கூடுதல் செயலராகவும், தொடர்ந்து, மத்திய மாசுக்கட்டுப்பாட்டுத் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

மத்திய அரசு பணி: 2021-ல் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க, மாநில அரசுப் பணிக்கு அவர் மாற்றப்பட்டார். தொடர்ந்து, அவர் நகராட்சி நிர்வாகத் துறைச் செயலராகப் பணியாற்றி வருகிறார். 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணியில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது செயலர்களில் ஒருவராக இருந்தார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், மத்திய அரசுப் பணிக்கு சிவ்தாஸ் மீனா சென்றார். அடுத்த ஆண்டு அக்டோபரில் சிவ்தாஸ் மீனா ஓய்வு பெறுவார்.

13 வது இடத்தில்....: தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் 32 அதிகாரிகள் உள்ளனர். இவர்களில் 13-வது இடத்தில் சிவ்தாஸ் மீனா உள்ளார். இவருக்கு முந்தைய 12 பேரில் இன்று ஓய்வுபெறும் வெ.இறையன்புவும் ஒருவர். மீதமுள்ளவர்களில் டி.வி.சோமநாதன், ஜதிந்திரநாத் ஸ்வைன், கே.ராஜாராமன், அனிதா பிரவீன் ஆகியோர் மத்திய அரசுப்பணியில் உள்ளது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE