செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 12 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை மாதம் 12-ம் தேதி வரை நீட்டித்து சென்னை அமர்வு முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.

இன்றுடன் செந்தில் பாலாஜியின் 14 நாள் நீதிமன்ற காவல் முடிகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை அமர்வு முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் காணொலி வழியாக செந்தில் பாலாஜி ஆஜரானார். ஆஜரான செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி நலம் விசாரித்தார். உடல் நலம் குறித்த விசாரித்த நீதிபதியிடம் அறுவை சிகிச்சையினால் சற்று வலி உள்ளது என்று செந்தில் பாலாஜி பதில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து நீதீபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.

முன்னதாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். அப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால், அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், இதயத்துக்குச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவர்களும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

செந்தில் பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 15-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். மருத்துவர்கள் ஏற்கெனவே முடிவு செய்தபடி, அவருக்கு கடந்த 21-ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் 2 வாரங்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்று தகவல் வெளியானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE