100 நாள் வேலை | தமிழகத்துக்கு மத்திய அரசு இடையூறு செய்வதாக மாணிக்கம் தாக்கூர் எம்.பி. குற்றச்சாட்டு

By என்.சன்னாசி

மதுரை: 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்துக்கு இடையூறு செய்கிறது மத்திய அரசு என்று மாணிக்கம் தாக்கூர் எம்.பி. குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் அருகிலுள்ள புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்றிடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா இன்று நடந்தது. விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசு, வழங்கி பாராட்டினார். இதன்பின், செய்தியாளர்களிடம் அவர் பேசியது: ''100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு தொடர்ந்து இடையூறுகளை செய்கிறது.

வறுமைக் கோடு பட்டியலில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என மத்திய அரசு பிறப்பித்திருக்கின்றது. இது கொடுமையானது. தமிழகத்தில் பெரிய அளவில் 60% பேருக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியிழப்பு சதி நடக்கிறது. ஏழைகளுக்கான இத்திட்டத்தை நிறுத்தி மத்திய அரசு முயற்சிக்கிறது. இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதுவேன்.

இத்திட்டத்தில் பாகுபாடி இன்றி பணி கொடுக்க வேண்டும் என்பதுதான் திட்டம் நோக்கம். இத்திட்டத்தில் ஏறக்குறைய ரூ.3 கோடி சம்பள பாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் வேலை செய்யும் ஏழைகளின் பணத்தை மத்திய அரசு பிடித்து வைத்திருப்பது துரோகம். இது பற்றி பேச பாஜக மாநிலத் தலைவருக்கு நேரமில்லை. இப்போது லண்டன் சுற்றுப்பயணத்தில் உள்ளார். கடந்த முறை ரபேல் கடிகாரம் வாங்கி வந்தது போன்று இம்முறை என்ன பரிசு வாங்கி வந்திருக்கிறார் என, விமான நிலையத்தில் அவர் சொல்ல வேண்டும்.

பாட்னாவில் 16 கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் புத்தர் பிறந்த ஊரில் நடந்தது. ஆம் ஆத்மி கட்சி சார்பில், சலசலப்பு உருவாகியதாக தெரிகிறது. நீண்ட கால கொள்கை அடிப்படையில் அனைவரும் சேர்ந்து மதவாத எதிர்ப்புணர்வை, வெறுப்பு அரசியலுக்கு புற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஒத்த கருத்துக்கு வந்துள்ளனர். திருமங்கலத்தில் இருந்த ஹோமியோபதி மருத்துவமனை தோப்பூருக்கு மாற்றப்படுவது என்பது, திருமங்கலத்துக்கும், எய்ம்ஸ்க்குமான தூரம் 8 கிலோமீட்டர். இதில் எந்த அரசியலும் ஈடுபடக்கூடாது. அதிமுக நண்பர்கள் தேவையின்றி அரசியலை உருவாக்கக் கூடாது.

எய்ம்சை கொண்டு வரவிடாமல் இரு முன்னாள் அமைச்சர்கள் தாமதம் ஆக்கினர். ஹோமியோபதி மருத்துவமனை விவகாரத்தில் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும். அண்ணாமலையை பொறுத்த அளவில் பொறுப்பில்லாமல் பேசுவதும், தகுதிக்கு மீறி பேசுவதும் வழக்கமாகிவிட்டது. வழக்குகளை வைத்து மிரட்டும் முன்னாள் போலீஸ் அதிகாரியின் குணத்தை தமிழக மக்கள் நிராகரிப்பர். மக்கள் பிரதிநிதிகள் பிரச்சனையை எடுத்த பேசுவதும், அரசியல் பூர்வமாக மாற்றுவதும் பல காலமாக நடக்கிறது. பெரியதாக எடுக்க வேண்டியதில்லை'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE