சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது விசாரணை நடத்துவது தொடர்பான மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்காத நிலையில், வழக்கை எப்படி நடத்துவது என சிபிஐ நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். இந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.
இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
» அதிமுகவின் நலன் பாதிக்காத வகையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு: ஜெயக்குமார் விளக்கம்
» விபத்தில் சிக்கிய ‘டைட்டன்’ நீர்மூழ்கி... ட்ரோல் செய்யப்படும் நெட்ஃப்ளிக்ஸ் - காரணம் என்ன?
இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அமைச்சர் மற்றும் டிஜிபி என வேறு யாருடைய பெயர்களும் இடம்பெறவில்லை.
இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19-ம் தேதி அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து 11 பேருக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், தமிழகத்தில் குட்கா வழக்கு விவகாரம் தொடர்பாக தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது சிபிஐ விசாரணை நடத்தலாம் என மத்திய அரசும் விசாரணைக்கு அனுமதி அளித்திருந்தது.
அந்தக் கூடுதல் குற்றப் பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் தொடர்பான விபரங்களை இணைத்தும், குற்றம்சாட்டபட்டவர்களுக்கு எதிரான விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும், தவறுகளை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப் பத்திரிகையை சிபிஐக்கு திரும்ப அளித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பிழையைத் திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை. குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான விசாரணை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்பாக இன்னும் மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை. மற்றவர்களுக்கு எதிராக அனுமதி கிடைத்துவிட்டது ( அனுமதி கிடைத்தவர்கள் பெயர் மற்றும் கிடைக்கதவர்கள் பெயரை, நீதிமன்றத்தில் தெரிவிக்காத சிபிஐ, எண்ணிக்கையை மட்டுமே தெரிவித்தனர்) எனவே வழக்கில் கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கபட்டது.
அப்போது நீதிபதி, அனுமதி கிடைக்காத நிலையில் வழக்கை எப்படி நடத்துவது? என சிபிஐக்கு கேள்வி எழுப்பி, விசாரணையை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில், மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை எனக்கூறி, கடந்த 2022 டிசம்பர் 15ம் தேதி முதல் 2023 ஜூன் 26 இன்று வரை 10 முறை இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022 டிச. 15, 2023 ஜன.10, பிப்.6, பிப்.17, மார்ச் 20, ஏப்.18, ஏப்.25, மே 11 ஜூன் 3, மற்றும் ஜூன் 26 ஆகிய தேதிகளில் மத்திய அரசின் கடிதம் கிடைக்கவில்லை என சிபிஐ கூறியதைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.