உதவிப் பேராசிரியர்களுக்கு ஜூலை 4ம் தேதி பதவி உயர்வு கலந்தாய்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By செய்திப்பிரிவு

சென்னை: உதவிப் பேராசிரியர்களுக்கு ஜூலை 4ம் தேதி பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக வெண்புள்ளிகள் தினத்தை முன்னிட்டு, இந்திய வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில், சேர்ந்து வரைவோம் மற்றும் விழிப்புணர்வு உறுதியேற்பு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆஷா பணியாளர்கள் புதிதாக வந்தவர்கள் அல்ல, அவர்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுக்கு முன்னர் இருந்தே பணியாற்றிக்கொண்டிருகிறார்கள். அவர்கள் அனைவரும் தமிழக அரசால் நேரடியாக பணியமர்த்தப்பட்டவர்கள் அல்ல. கிராமங்கள், மலைக்கிராமங்களில், செவிலியர்கள், கர்பிணித் தாய்மார்களுக்கு உதவியாக பல்வேறு பணிகளை செய்து கொண்டிருப்பவர்கள். ஒவ்வொரு நாளும் 4 முதல் 6 மணிநேரம் இவர்களது பணி நேரமாகும்.

இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்னாள் ரூ.3000 மட்டுமே இவர்களுக்கு தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலம் உதவித்தொகை (Incentive) கிடைத்துக்கொண்டிருந்தது. இந்த உதவித்தொகை போதாது என்று ஒரு மாநாடு நடத்தி என்னையும் அழைத்து கோரிக்கையினை விடுத்திருந்தார்கள். முதல்வரின் அறிவுறுத்தலையேற்று, மத்திய அமைச்சரை சந்தித்து தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. முதல்வர், 2021க்கு பிறகு ஆஷா பணியாளர்களுக்கு தொற்றா நோய்கள் போன்ற சிகிச்சைகளுக்கு உதவியாக இருந்ததால், ரூ.500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும், அவசர உதவிகளுக்கு ரூ.100 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதன் விளைவாக இவர்கள் ரூ.4000 முதல் ரூ.6000 வரை உதவித்தொகையாக பெறுகிறார்கள். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இவர்களுக்கு உடை, வெப்பமாணி, சீருடை சேலைகள், தொப்பி போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வளவு சலுகைகளும் இந்த ஆட்சி வந்ததற்கு பிறகு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் எதைப்பற்றியும் தெரிந்துக் கொள்ளாமல் ஒரு முன்னாள் முதல்வர் அறிக்கை கொடுப்பது என்பது நகைப்பிற்குரியதாக உள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பதவியிலிருந்து இணைப் பேராசிரியராக 423 நபர்களுக்கு பதவி உயர்வு தரப்படவேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. அந்த வழக்கினை முதல்வரின் அறிவுறுத்தலைப்பெற்று துரிதப்படுத்தினோம். இந்த வழக்கில் வரும் 06.07.2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு இவர்களுக்கு பதவி உயர்வு தருவதற்கு கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என்கின்ற வகையில் தீர்ப்பு அமையும் என எதிர்பார்க்கிறோம்.

இவர்களுக்கு பதவி உயர்வே இல்லை, மருத்துவக்கல்லூரிகள் எல்லாம் மூடும் நிலைக்கு வந்துவிட்டது என்றெல்லாம் சொல்வது மிகவும் தவறான செய்தியாகும். எனவே இந்த உதவிப்பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு வருகின்ற 04.07.2023 அன்றே தொடங்க இருக்கின்றோம். உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்தாய்வில் கலந்து கொண்டு இணைப் பேராசிரியராக பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE