நாமக்கல்: ஜேடர்பாளையம் அருகே விவசாயத் தோட்டத்தில் 1,800 பாக்கு மரங்களை வெட்டி சாய்த்த மர்ம நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அசம்பாவிதம் தவிர்க்க ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரைச் சேர்ந்தவர் விவசாயி சௌந்தர்ராஜன்(60). இவருக்கு சொந்தமான விளைநிலம் ஜேடர்பாளையம் அருகே சின்னமருதூர் செல்லும் சாலையில் உள்ளது. இதில் 2 ஏக்கர் பரப்பளவில் 3,000 எண்ணிக்கையிலான பாக்கு மரங்கள் நடவு செய்துள்ளார். இன்று அதிகாலை சின்னமருதூரைச் சேர்ந்த தங்கமுத்து என்பவர் தனது விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்துள்ளார். அப்போது செளந்தர்ராஜன் விளைநிலத்தில் இருந்த பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டிருந்து. இதுகுறித்து செளந்தர்ராஜனுக்கும் ஜேடர்பாளையம் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளார். அதிர்ச்சியடைந்த செளந்தர்ராஜன் விரைந்து வந்து பார்த்தபோது 1,800 பாக்குமரங்கள் வெட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராஜேஸ்கண்ணன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். எனினும், மரங்கள் வெட்டப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவில்லை. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராஜேஸ்கண்ணன் கூறுகையில், ''ஜேடர்பாளையம் சம்பவத்திற்கும் தற்போது மரங்கள் வெட்டப்பட்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஜேடர்பாளையத்தில் இருந்து இக்கிராமம் 7 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.
இதனிடையே சம்பவம் நடந்த கிராமத்தில் அசம்பாவிதம் தவிர்க்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மரங்களை வெட்டிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஜேடர்பாளையம் அருகே காரப்பாளையத்தில் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி திருமணமான இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். எனினும் அங்குள்ள வெல்ல தயாரிப்பு ஆலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தான் காரணம் எனக் கூறி விசாயிகள் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வீடுகள், பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்தல் போன்ற சம்பவங்களில் மர்மநபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மாதத்திற்கு முன் வட மாநில தொழிலாளர் தங்கியிருந்த குடிசைகளுக்கு தீ வைத்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விவசாய தோட்டம் ஒன்றில் 200க்கும் அதிகமான பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.