லண்டன் பூங்காவுடன் இணைந்து செங்கல்பட்டு அருகே ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா: விரைவில் விரிவான திட்ட அறிக்கை 

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிக்கு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் 137 ஹெக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது. இத்திட்டம் 2027-ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தில், பூர்வீக இனங்களின் தோட்டம், ஆர்போரேடம்ஸ், பேம்புசிடம்ஸ், மரக்கன்றுகள் மற்றும் ஹீலிங் கார்டன், மூலிகைத் தோட்டம், ரோஜா தோட்டம், ராக்கரி, ஜப்பானிய தோட்டம், பண்டைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பு போன்ற கூறுகளும் இடம்பெற்றிருக்கும்.

மேலும், வழிகாட்டப்பட்ட நடைபயிற்சி, குழந்தைகள் மற்றும் தாவர உயிரியல் பன்முகத்தன்மை பற்றி மாணவர்களுக்குத் தெரிவிக்கும் கல்வித் திட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கான பயிற்சி பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள், படகு சவாரி, இயற்கை பாதைகள், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் பிற ஆரோக்கிய நடவடிக்கைகள் உள்ளிட்ட செயல்பாடுகளையும் கொண்டிருக்கும்.

இத்தாவரவியல் பூங்கா லண்டன் கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து அமைக்கப்படவுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அரசு சார்பில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிக்கு தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் டெண்டர் கோரியுள்ளது. இதன்படி 90 நாட்களுக்குள் டெண்டர் பணிகள் இறுதி செய்யப்பட்டு டெண்டர் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE