முதல்வர் கோப்பைக்கு காரைக்குடி வடக்கு காவல் நிலையம் தேர்வு

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: தமிழக முதல்வர் கோப்பைக்கு சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி வடக்கு காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டது.

தமிழகத்தில் மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்து, ‘தமிழக முதல்வர் கோப்பை’ வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக போலீஸ் அதிகாரிகள் குழு மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்கிறது.

அக்குழுவினர், காவல்நிலையங்களில் புகார் கொடுக்க வருவோரை நடத்திய விதம், புகார்களை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுத்தது, குற்றவாளிகளை கைது செய்தது, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்தது, பாதிக்கப்பட்டோருக்கு சொத்துகளை மீட்டுக் கொடுத்தது, வளாகத்தை சுகாதாரமாக, தூய்மை வைத்திருந்தது உள்ளிட்ட செயல்பாடுகளை மதிப்பிடும்.

அதன்படி போலீஸ் அதிகாரிகள் குழு மாவட்டந்தோறும் ஆய்வு செய்து, கடந்த 2021-ம் ஆண்டுக்கான சிறந்த காவல்நிலையங்களை தேர்வு செய்தது. இதில் காரைக்குடி வடக்கு காவல்நிலையம் தேர்வாகியுள்ளது. தேர்வான காவல்நிலையங்களுக்கு முதல்வர் கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 27-ம் தேதி வழங்குவார்.

சிறப்பாக செயல்பட்ட காரைக்குடி வடக்கு காவல்நிலைய போலீஸாரை, ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, எஸ்பி செல்வராஜ், உதவி எஸ்பி ஸ்டாலின் ஆகியோர் பாராட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE