தமிழகத்தை காப்பாற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின் பிஹார் சென்று பிரதமரை உருவாக்குகிறாராம்: இபிஎஸ் விமர்சனம்

By த.சக்திவேல்

மேட்டூர்: தமிழகத்தை காப்பாற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின் பிஹார் சென்று அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி, சவுரியூர், காப்பரத்தாம்பட்டி, கரிக்காபட்டி பகுதிகளில் நங்கவள்ளி தெற்கு ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட அதிமுக கொடியை இன்று (ஜூன் 24) அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு ஏற்றி வைத்தார். முன்னதாக, அவருக்கு, கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "இந்தியாவில் அதிக தார்சாலை கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். கிராமத்தில் பேருந்து போக்குவரத்துக்கான சாலைகளை தார் சாலைகளாக மாற்றினோம். கிராம், நகரம் என அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு, அதிமுக கொண்டுவந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்கின்ற காட்சியைத்தான் சாதனையாக பார்க்கிறோம். ஏழை குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத முதல்வர்தான் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதுவரை எந்த முயற்சியும் எடுக்காத அரசாங்கம் தான் திமுக அரசு.

தமிழகத்தில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்துவார்கள். இதனால் கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. 2 ஆண்டு கால ஆட்சியில், ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதனால் மக்கள் நன்மை பெற்றனரா என்றால் கிடையாது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டத்தைத்தான் முதல்வர் தற்போது திறந்து வைக்கிறார். பேனா நினைவு சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை. ஆனால், எழுதாத போனாவை கடலில் வைப்பதற்குத்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

கூரை ஏறி கோழி பிடிக்கதாவன், வானம் ஏறி வைகுண்டம் போனான். அதுபோல், தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், பிஹார் சென்று சர்வகட்சித் தலைவர்களுடன் சேர்ந்து நாட்டின் பிரதமரை உருவாக்கிறாராம். 2021ம் ஆண்டு தேர்தலில் 525 அறிவிப்புகளை அறிவித்தார். பின்னர், எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் விலைவாசி 50 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், வருமானம் தான் இல்லை. ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக என்ற மிகப்பெரிய கட்சிக்கு, நம்முடைய சட்டமன்ற தொகுதியில் இருந்து பொதுச்செயலாளராக வந்து பெருமை எனக்கு உண்டு. வருகின்ற நாடளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேடி தாருங்கள். தமிழகம் மிகச்சிறந்த மாநிலமாக உங்கள் நல்லதரவை தர வேண்டும்.

அதிமுக மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. அதிமுக ஆட்சியில் அறிவித்த மற்றும் அறிவிக்கப்படாத ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக அறிவித்த திட்டங்களில் பல நிறைவேற்றப்படவில்லை. இது ஜனநாயக நாடு, இது சர்வதிகார ஆட்சி கிடையாது. ஒவ்வொரு மனிதனுக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு. திமுகவில் வாரிசுகளுக்கே பதவி கொடுக்கப்படுகிறது. அதிமுகவில் சாதாரண தொண்டன்கூட தலைமை பதவிக்கு வரலாம்.

செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைது செய்யப்பட்டவர். அவர் அமைச்சராக இருக்கலாமா? இதற்கு முன்பு, அதிமுக, திமுக ஆட்சிக் காலத்தில் கைதான அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், ஸ்டாலின் இதெல்லாம் பொருட்படுத்தவில்லை. கைதான அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் தான் அதிகம். நான் முதல்வராக இருந்தவன். எல்லா விஷயமும் தெரியும். நாங்கள் நினைத்து இருந்தால் உங்கள் மீது வழக்கு போட முடியாதா?. நான் வழக்கு போடவில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் மனதில் இருந்து. 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியைத் தந்தோம். பொது இடத்தில் கூட்டம் போட்டு, எங்கள் ஆட்சி மீது உள்ள குற்றச்சாட்டுகளை சொல்லுங்கள், அதற்கு நான் பதில் தருகிறேன்.

தமிழகத்தில் மதுபான பார்கள் மூலம் ஒரு நாளைக்கு 10 கோடி என வருடத்துக்கு 3,600 கோடி ஊழல் செய்துள்ளார். இதற்கு தான் மத்திய அரசாங்கம் இன்று ரெய்டு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்து விட்டால் அவர் கோட்டையை விட்டு, வேறு இடத்திற்கு செல்வார். மக்களுக்கு சேவை செய்யும் முதல்வராக ஸ்டாலின் இல்லை. திட்டங்களை மூடுவதற்கான முதல்வராகத்தான் அவர் உள்ளார்" என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE