கரூர்: கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கரூர்-ஈரோடு சாலை கோதை நகரில் உள்ள சக்தி மெஸ் பங்குதாரர்கள் கார்த்திக், ரமேஷ் ஆகியோர் வீடுகளில் தலா ஒரு அறை, காமராஜபுரத்தில் உள்ள பொறியாளர் பாஸ்கர் அலுவலகம், காந்திபுரத்தில் உள்ள ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர்ஆனந்த் வீடு, வையாபுரி நகரில் உள்ள ஆடிட்டர் சந்திரசேகரின் அலுவலகம், ஜவஹர் பஜாரில் உள்ள பழனிமுருகன் நகைக்கடையில் உள்ள ஒரு அறை ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், கரூருக்கு நேற்று காலை வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், கார்த்திக், ரமேஷ் ஆகியோர் வசிக்கும் வீடுகளில் உள்ள அறைகள் உள்ளிட்ட 6 இடங்களில் ஏற்கெனவே வைக்கப்பட்ட சீலை அகற்றி மீண்டும் சோதனை நடத்தினர். ஆனால், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. சோதனையின்
போது 20-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.