கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை - தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தலைமை நீதிபதி கூறினார்.

சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்தது. 1974-ல் இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். 1983 முதல் 2005 வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர். தமிழக மீனவர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை இழந்துள்ளனர். 2013-ல் 111 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொலை செய்தனர். 19.06.2023ல் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். 21.6.2023-ல் 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கை கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். எனவே 22 மீனவர்களை மீட்கவும், 1974ம் ஆண்டின் இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில், கைதான மீனவர்களை ஜூலை 5ம் தேதி வரை இலங்கை நீதிமன்றத்தில் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள், படகுகளையும் மீட்க தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, இந்தியா- இலங்கை இடையிலான 1974ம் ஆண்டின் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று உத்தரவிட்டது. மேலும், விசாரணை ஜூலை 7க்கு ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE