7 மாதங்களாக பொறுப்பாளர் இல்லாத மதுரை தேவநேய பாவாணர் மணிமண்டபம்: தமிழ் அறிஞர்கள் வேதனை

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: கடந்த 7 மாதங்களாக பொறுப்பாளர் இல்லாமல் மதுரை தேவநேயப் பாவாணர் மணிமண்டம் செயல்படுகிறது. தினமும் தூய்மைப் பணியாளர் ஒருவர் திறந்து வைத்து, மண்மண்டபத்தை நிர்வகிக்கிறார். அவர் முதியவர் என்பதால் அவரால் தினமும் மணிமண்டபத்தை தூய்மைப்படுத்தி நிர்வகிக்க முடியவில்லை. இது குறித்து தமிழ் அறிஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தன் உயிர் பிரியும் தருணம் வரை தமிழ் மொழிக்காகவே வாழ்ந்து மறைந்த 'மொழி ஞாயிறு' தேவநய பாவாணரை போற்றும் வகையில் மதுரை மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலை தாங்கிய மணிமண்டபம் உள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு இந்த மணிமண்டபத்தை மறைந்த அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். பாவாணரின் பேத்தி ஏ.எம்.டி.பரிபூரணத்துக்கு மணிமண்டப பொறுப்பாளராக அரசு பணி நியமனம் வழங்கப்பட்டது. பேத்தியே, தாத்தாவின் மணிமண்டபத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவர் மணிமண்டபத்தை திறந்த வைத்து சிறப்பாக பராமரித்து வந்தார்.

தன்னுடைய தாத்தாவின் வரலாற்றை அறிந்த அவர், குடும்ப வரலாறு, தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டுகளை, மணிமண்டபத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு எடுத்து கூறி வந்தார். இந்நிலையில், பாவாணரின் பெயர்த்தி ஏ.எம்.டி.பரிபூரணம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி உடல்நலக் குறைவால் பணிக்காலத்தில் இருக்கும்போது இறந்துவிட்டார்.

பாவாணரின் பேத்தி இறந்தபிறகு 'மொழி ஞாயிறு' தேவநேய பாவாணரின் மணிமண்டபம் கடந்த 7 மாத காலமாக காப்பாளர் இல்லாமல் இயங்கி வருகிறது. செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் அவர்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த தூய்மைப்பணியாளர் ஒருவர், தற்போது தற்காலிக பொறுப்பாளராக மணிமண்டபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வயதானவர் என்பதால் அவரால் தினமும் மணிமண்டபத்தை முன்போல் முறையாக பராமரிக்க முடியவில்லை. மாநகராட்சி பணியாளரை கொண்டு அவ்வப்போது தூய்மை செய்து பராமரிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாவாணர் பேத்தி பரிபூரணத்தின் மகள் தனக்கு அந்த மணிமண்டபம் பொறுப்பாளர் பணி வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் மனு கொடுத்து காத்திருக்கின்றனர். ஆனால், அவரது குடும்பத்தை சேர்ந்தவர் ஒருவர் பணி நியமனம் செய்யப்பட வேண்டுமென்றால் யாரும் அரசு பணியில் இருக்கக்கூடாது என்றும், அப்படியிருந்தால் அப்பணி வழங்கப்பட மாட்டாது எனவும் கூறப்படுவதால் தற்போது பரிபூரணம் குடும்பத்தில் அவரது மகன் அரசு பொறுப்பில் இருப்பதால் அவரது மகளை மணிமண்டபத்திற்கு பொறுப்பாளர் நியமிக்கப்படாமல் தள்ளிப்போய் கொண்டு இருக்கிறது.

அதனால், மணிமண்டபத்திற்கு பொறுப்பாளர் இல்லாமல் பொலிவிழந்து மணிமண்டபம் காணப்படுவதாக தமிழ் அறிஞர்கள் வேதனை அடைந்துள்ளனர். அதனால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE