சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் அடையாற்றின் கரையோரம் சித்ரா நகரில் வசித்த 206 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்யும் பணிகள் நேற்று தொடங்கின.
சென்னை மாநகரில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தை தொடர்ந்து, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அடையாற்றின் கரையோரம் வசிப்போரின் பாதுகாப்பு கருதி, அவர்களை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்ய உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, அடையாற்றின் கரையோரம் வசித்த குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டன. அதில் சுமார் 9,500 குடும்பங்கள் வசித்து வந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் படிப்படியாக மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 4,500 குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக கோட்டூர்புரம் சித்ரா நகரில் வசித்து வரும் 206 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்யும் பணிகளை மாநகராட்சி, நீர்வள ஆதாரத்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து நேற்று மேற்கொண்டன. இந்த குடும்பங்கள் மறைமலை நகர் அருகில் உள்ள நகர்ப் புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றன.