பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

சென்னை: கிராமப்புறங்களில் அரசின் சொத்துகளைப் பாதுகாப்பது, புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களைக் கணக்கெடுத்து, அவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வருவாய்த் துறையின் கிராம உதவியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 12,256 கிராம உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் முன் அவர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழக வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க மாநிலப் பொதுச்செயலர் தமிழ்ச் செல்வன் கூறும்போது, ``பணியின் போது உயிரிழக்கும் கிராம உதவியாளர் குடும்பத்தினருக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், அரசாணை 33-ல் கருணை அடிப்படையில் பணி நியமனம் மறுக்கப்படுகிறது.

இந்த ஆணையில் உரிய விதிவிலக்கு அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி வழங்காமல், ஓராண்டாக காலதாமதம் செய்யப்படுகிறது. அதை உடனடியாக வழங்க வேண்டும். இதேபோல, பங்களிப்பு ஓய்வூதிய இறுதித் தொகை வழங்கப்படவில்லை. அதையும் உடனே வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கள் தொடர்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE