இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிக்க தடை கோரி உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி மனு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் தாக்கல் செய்துள்ள மனுவில், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி வசம் இருந்த துறைகளை இரு அமைச்சர்களுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.மேலும், செந்திலபாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் எனவும் அறிவித்தது.

செந்தில்பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். அமலாக்கத் துறை வழக்கை எதிர்கொண்டுள்ள செந்தில்பாலாஜி, அமைச்சராக நீடிப்பதை விரும்பவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ள சூழலில், அவர் பதவியில் நீடிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது.

அரசியலமைப்புச் சட்டம் 164 (1)-வது பிரிவின்படி, அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இந்த நிலையில், செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது சட்டவிரோதமானது. அவர் எடுத்துகொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய செயல்.

நீதிமன்ற காவலில் உள்ளவரை அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது அரசியல் சாசன அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையை வீழ்த்தி விடும். எனவே, செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிக்க தடை விதிக்க வேண்டும். அவருக்கு அமைச்சர்களுக்கு வழங்கப்படும் எந்த சலுகைகளையும் வழங்கக்கூடாது" என்று மனுவில் கோரியுள்ளாார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE