திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாதிச் சான்றிதழ் வழங்காததால் கல்லூரிப் படிப்பு தடைப்பட்ட காரணமாக தற்கொலைக்கு முயன்ற பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி, சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜூலை 22) அதிகாலை உயிரிழந்தார்.
திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி. தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். பன்னியாண்டி சமுதாயத்தை சேர்ந்த இவர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று, உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார். அப்போது பன்னியாண்டி சமுதாயத்துக்கு வழங்கப்படும் எஸ்.சி சாதிச் சான்று இல்லாததால், மாணவியின் உயர் கல்வி கேள்விக்குறியானது. திருவண்ணாமலை வருவாய் துறையிடம் சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும், அவருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர், கடந்த 17-ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ராஜேஸ்வரின் உடல்நிலை நேற்று (ஜூன் 21) மோசமடைந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 22) அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பன்னியாண்டி சங்கத்தைச் சேர்ந்தவர்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திரண்டனர். அப்போது அவர்கள், பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரிக்கு எஸ்.சி சாதிச் சான்றிதழை கொடுக்காமல் காலம் தாழ்த்திய வருவாய் துறையை கண்டித்து முழக்கமிட்டனர். மேலும் அவர்கள், சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.